திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி

திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பினை பேணிய 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி 4 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசித்துள்ள நிலையில் பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் அந்த கப்பலின் பணிக்குழாமினர் திடீரென நோய் நிலைக்கு உள்ளானதால் பீ.சீ.ஆர் பரிசோதரனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் அந்த கப்பலின் பணிக்குழாமினர் கொழும்பு துறைமுகத்தில் அல்லது திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்து எவருடனும் நேரடி தொடர்பினை பேணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 22 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றுறுதியான 3 ஆயிரத்து 208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட் தொற்றுறுதியாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறபவர்களின் எண்ணிக்கை 128 ஆக குறைவடைந்துள்ளது.