பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை தேடித்தரும்! 12 ராசிகளுக்கான பொதுப் பலன்கள்

பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை தேடித்தரும்! 12 ராசிகளுக்கான பொதுப் பலன்கள்

மிழ்ப் புத்தாண்டு பிறக்கின்ற வேளையில் கிரகங்கள் நல்ல வலுவான நிலையில் இருக்கின்றன மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிர பகவானும், மற்றும் சந்திரனும் (பரணி நட்சத்திரத்தில்), ரிஷபத்தில் ராகுவும், மிதுனத்தில் செவ்வாயும், விருச்சிகத்தில் கேது பகவானும், மகரத்தில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்பத்தில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமாகவும், கிரகங்கள் வலுவாக இருக்கின்றன.

(இந்த கிரக நிலைகளை திருக்கணித பஞ்சாங்கத்தின் படியாக சொல்லியிருக்கிறேன்).இந்த பிலவ ஆண்டு நமக்கு என்ன மாதிரியான நன்மைகளைச் செய்யக் காத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக பார்க்க இருக்கிறோம். முன்னதாக, பிலவ ஆண்டுக்கான பொதுப்பலன்கள் குறித்துப் பார்ப்போம்.

பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு, மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். உணவுத் தொழில் கொடிகட்டிப் பறக்கும்.

விவசாயம் செழிப்பாக இருக்கும், மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.அயல்நாடு தொடர்பு உடைய தொழில்களில் மந்தநிலை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தகம் குறையும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் எந்தவொரு செய்தியையும் உறுதிப்படுத்திய பின்பே செய்தியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற சிக்கல்களைச் சந்திக்க வேண்டியது வரும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.

அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். பிரச்சினைகள், வழக்குகள் என அதிகம் சந்திக்க வேண்டியது வரும். அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள், உற்பத்தி தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

நிறுவனத்தை மூடி விடலாமா என்ற சிந்தனையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும். அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும்.

பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.

காரணம்...இந்த பிலவ ஆண்டு துலாம் ராசியில் அமைந்திருக்கிறது. துலாம் ராசி என்பது திருமணத்தைக் குறிக்கும் ராசி. எனவே எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான திருமணங்கள் பிலவ ஆண்டில் நடக்கும்.

மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும், மனதையும், கவனத்தையும் ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

திரைத்துறைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரளவுக்கு மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும். எனவே அதிகப்படியான பணச் செலவில் எடுக்கும் திரைப்படங்களை சிக்கனமாக எடுக்க வேண்டியது அவசியம். இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

பொதுவாக, மக்கள் அனைவரும் ஸ்ரீதுர்கையை வணங்கி வருவது நமக்கு மட்டுமின்றி, நம் தேசத்துக்கே பல நன்மைகளைத் தரும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவோம்.

திருக்கடையூர் அபிராமி அன்னையை வணங்கி வாருங்கள். அபிராமி அந்தாதியை தினமும் பாராயணம் செய்வதும் நல்ல வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் தரும்.

- தி ஹிந்து தமிழ்