திலீபனின் நினைவாலயத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் ஆரம்பமாக, வடிவமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளைச் சுமந்தவாறு, இந்த 'முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி' வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிப்பதற்காகத் தனது பயணத்தை இன்று நல்லூரில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.