14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21/08/2026) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டது
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்த நிலையில் இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் (21.08.2026) வழங்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.
குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள் நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார். சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.
கடுங்காவல் சிறைத்தண்டனை
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.
தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.