சகோதரியின் கணவனை கோடரியால் வெட்டிய மைத்துனன் கைது

சகோதரியின் கணவனை கோடரியால் வெட்டிய மைத்துனன் கைது

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது சகோதரியின் கணவரை கோடரியால் வெட்டிய மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று(24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மொரவெவ டி-06 பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்றழைக்கப்படும் பரமானந்தன் பிரசாந்த் (36 வயது) என்பவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரவெவ பம்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த கே.சரத்குமார் (40 வயது) என்பவர் கைது செய்தவரின் சகோதரியை திருமணம் செய்த நிலையில் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று இவர் வீட்டுக்கு சென்று மைத்துனனுடன் முரண்பாட்டில் ஈடுபட்டநிலையில் கோடரியால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் கோடரி வெட்டுக்கு இலக்கான நிலையில் வலது கையில் வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரை வெட்டிய மைத்துனனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.