
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
குருநாகல் மாநகரசபை அதிகார பிரதேச எல்லைக்குள் 8 பேர் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
வில்கொட, வில்கொடவத்தை, உடவல்பொல மற்றும் இந்துல்கொடகந்த ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக குருநாகல் மாநகரசபை அதிகார பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வில்கொட பகுதியில் இன்று பிற்பகல் முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 33 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய ஒருவருக்கு முன்னதாக தொற்றுறுதியானது.
இந்தநிலையில், அவருடன் தொடர்புடைய ஒருவருக்கு வாழைச்சேனை - கோறளைப்பற்று மத்திய பகுதியில் இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.
மற்றைய நபர் கொழும்பில் இருந்து நோய் அறிகுறிகளுடன் பட்டிப்பளைக்கு சென்றிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் கொவிட்19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.