நுவரெலியாவுக்கு சுற்றுலா வர வேண்டாம் - மக்களுக்கு விசேட அறிவிப்பு

நுவரெலியாவுக்கு சுற்றுலா வர வேண்டாம் - மக்களுக்கு விசேட அறிவிப்பு

மறு அறிவித்தல் விடுக்கும் வரை வார இறுதி மற்றும் அடுத்த வரும் தினங்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில், நுவரெலியா கிரகறி குள பூங்கா, விக்டோரியா பூங்கா, சந்த தென்ன உட்பட சுற்றுலாத் தலங்கள் மற்றும் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தீவிர அதிகரிப்பால் நாட்டின் பல பாகங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், மேல் மாகாணம் முழுவதிலும் இன்று இரவில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வர உள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலும் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.