
ஈஸ்டர் தாக்குதலுக்கு ஐ.தே.க.கூட்டாக பொறுப்பு கூற வேண்டும்- முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் உட்பட ஐ.தே.க.தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஹேமசிரி பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய தௌஹீத் ஜமாத்தின் தற்கொலை குண்டுதாரிகள் எத்தனை பேர் தாக்குதல்களை மேற்கொள்ள போகின்றார்கள் என்பது தொடர்பாகவும் அதன் தலைவர் சஹரான் ஹாஷிம் தொடர்பாகவும் கடந்த 2019 ஏப்ரல் 4ஆம் திகதி, வெளிநாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைக்கும் வரை தங்களுக்கும் எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லை.
மேலும், இத்தகையதொரு தாக்குதலை நடத்துவதற்கு பல வருடங்கள் திட்டமிடப்பட்டே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு திடீர் சம்பவம் அல்ல.
மாநில புலனாய்வு சேவையால் தயாரிக்கப்பட்ட பல்வேறு புலனாய்வு அறிக்கைகள், சஹரன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.