ஏமாந்து விடாதீர்கள்! மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
முக்கிய பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாகப் பண அச்சிடுதல் மற்றும் அந்நியச் செலாவணி விகித நிர்ணயம் ஆகியவை தொடர்பாகத் தற்போது பரப்பப்பட்டு வரும் தவறான கூற்றுகளுக்குப் பலியாகாமல் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
"ஏமாந்து விடாதீர்கள்!" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பில், நாணயங்களை அச்சிடுதல், தேசியப் பண விநியோகத்தை நிர்வகித்தல் மற்றும் அந்நியச் செலாவணி விகிதங்களை நிர்ணயித்தல் போன்ற சிக்கலான பொருளாதார வழிமுறைகள் மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
சிறப்புத் தொழில்நுட்ப அறிவு
இந்தச் செயல்முறைகளைச் சரியான முறையில் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்கு, சிறப்புத் தொழில்நுட்ப அறிவு அவசியமானது என்றும் வங்கி வலியுறுத்தியுள்ளது.
எனவே, தற்போது பொதுவெளியில் பரவி வரும் மேலோட்டமான மற்றும் துல்லியமற்ற கருத்துக்களால் பொதுமக்கள் யாரும் ஈர்க்கப்படவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.