சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை..!
தீப்பற்றலுக்கு உள்ளான எம்.டி.நியூ. டயமன்ட் கப்பலில் உள்ள எண்ணெய் மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் கசிந்தி எண்ணெய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையின் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அதனை சட்டமா அதிபருக்கும் அனுப்புவதற்கான செயற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கப்பலின் தலைவரை எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அண்மையில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் சமாப்பணங்களை முன்வைத்த போது கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 3 ஆம் திகதி எம்.டி.நியூ. டயமன்ட் கப்பலில் தீப்பற்றிய வேளை உரிய தொடர்பாடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே எந்தவித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.