போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

சட்டவிரோதமான முறையில் ஹெரோயின், ஐஸ்போதை மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த 4பேரையும் இம்மாதம் 30ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சில சந்தேக நபர்கள் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின், 220 மில்லி கிராம் ஐஸ்போதை, மற்றும் 3 கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைதானவர்கள் 45, 30, 28 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும், குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் நேற்றயை தினம் சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன பொலிஸ் கன்டபிள்களான துரைசிங்கம் திலகரட்ன உள்ளிட்ட குழுவினர் ஆகியோரே இவர்களை கைது செய்துள்ளனர்.