
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ள பேரினவாதிகள்!
ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்படாதபோதிலும் மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழர் பிரச்சினைக்காகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.
ஆகினும் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கிலேயே மாகாணசபை முறைமையை ஒழிக்கும் முயற்சியில் தற்போது இனவாதிகள் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளூராட்சி சபையொன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அதிகாரப்பகிர்வுக்கான ஓர் தளமாக மாகாணசபைகளே இருக்கின்றன. ஆகவே ஜனநாயக விரோத பாதையில் பயணிக்க எத்தனிக்கும் இந்த அரசாங்கத்துக்கு கடிவாளம் போடும் வகையில், மாகாணசபை முறைமையை பாதுகாப்பதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும். தெற்கிலுள்ள முற்போக்கு சக்திகளை நாம் ஒன்று திரட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதற்கு இனவாதிகள் களமிறங்கியுள்ளனர். இதன் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது.
தமிழ், முஸ்லிம் மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்பதே பேரினவாதிகளின் சிந்தனையாக இருக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.