
பட்டதாரிகளுக்கு தகுதியான பயிற்றுவிப்பாளர்களை நியமிக்காத அரசாங்கம்! கடும் விசனம் வெளியிட்ட பட்டதாரிகள்
அரச நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் 100 பேருக்கு, 21 நாட்கள் இராணுவப்பயிற்சி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் வளவாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் எவ்விதமான தகுதிகளும் அற்றவர்களே என பட்டதாரி பயிலுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மெனிக்பாம் தலைமைத்துவப் பயிற்சி முகாமில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை . என்றும் விசனம் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து பட்டதாரி பயிலுனர்கள் சிலர் கருத்து தெரிவிக்கும் போது,
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் முகாமில் வளவாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் எவ்விதமான தகுதிகளும் அற்றவர்களே எமக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையானது அரசு சேவைகள் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையே இவ்வாறான நிலைக்கு காரணம் , புதிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரச நியமனங்கள் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரச நியமனத்தில் வித்தியாசமான நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக இராணுவத்தினருடன் நேரடியான தலைமைத்துவப்பயிற்சி செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் 21 நாட்கள் தங்கவைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது .
இரண்டாவது கட்டமாக பொது நிர்வாக பயிற்சி மாவட்டச் செயலகங்களில் வைத்து வழங்கப்படும், மூன்றாவது கட்டமாக பிரதேச செயலகத்தினூடாக முகாமைத்துவப்பயிற்சியும், நான்காம் கட்டமாக சிங்கள பிரதேச செயலகத்தினூடாக செயற்திட்டப்பயிற்சிகளும், ஐந்தாம் கட்டமாக மாவட்ட செயலகத்தின் இன்னுமொரு பகுதியான தனியார் துறைசார்ந்த பயிற்சியும் சுழற்சி முறையில் இவ்வாறு ஐந்து கட்டங்களாக பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன .
இவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகள் பட்டதாரிகளுக்கு தேவையானதாக காணப்பட்டாலும் செயற்படுத்தப்படும் திட்டமுறைகள் தவறுதலாக காண்பிக்கப்பட்டுள்ளது . பட்டதாரிகளை பயிற்றுவிப்பதற்கென்று உரிய தகுதியான வளவாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் . பட்டதாரிகளை விட எந்தவிதத்திலும் தகுதியற்ற ஒரு சிலரை பயிற்றுவிப்பாளர்களாக நியமித்து பட்டதாரிகளுக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் சில தவறுதலான நடவடிக்கையினால் இவ்வாறான ஒரு நிலை ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல மெனிக்பாம் பகுதியில் 21 நாட்கள் தலைமைத்துவப்பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு முகாமில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை . ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வரும்போது ஒவ்வொரு விதமான நடைமுறைகளைப் பின்பற்றப்படுகின்றது .
பொதுவாக ஒரு தொழிவாய்ப்புக்களை வழங்கும்போது ஒரு திட்டமுறைமையினைப் பின்பற்றவேண்டும் . இங்கு பார்த்தால் கடந்த அரசாங்கம் ஒரு முறையிலும் தற்போதைய அரசாங்கம் இன்னுமொரு முறையிலும் அரச கட்டமைப்பை மாற்றி அமைத்து நியமனங்களை வழங்குகின்றது. ஏற்கனவே உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படவில்லை.
எனவே அவர்கள் எவ்வாறு சரியான முறையில் நிர்வாக ரீதியில் திறனுள்ள ஒரு அரச ஊழியராக இருக்க முடியும் ? என்ற கேள்வியும் எமக்குள் எழுகின்றது. அவ்வாறெனில் இந்நடவடிக்கைகள் ஒரு அரச நிகழ்ச்சி நிரலில் மேற்கொள்ளப்படுவதாகவே நாங்கள் இதனைப்பார்க்கின்றோம் . அரச சேவைகள் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட விளைவே இந்நிலைமைகளுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர் .