வல்வெட்டித்துறை உணவகங்கள் , திருமண மண்டபங்களில் லஞ்ச்சீற் பாவனைக்கு தடை; கடும் உத்தரவு
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி லஞ்ச்சீற் பயன்படுத்தும் உணவகங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என்று வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

லஞ்ச்சீற் பாவனையை முற்றாகத்தடை செய்யும் முகமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் நேற்றைய தினம் (09) கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலின் போது வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சகல உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் குறித்த நடைமுறை தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மாற்று ஏற்பாடுகளுக்காக அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனவரி 16 முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.