ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை! அமைச்சர் சமரசிங்க
டபள் கெப் வாகனம் திருத்த வேலைகளுக்குப் போயுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அதிகாரத்துக்கு வந்த உடன் ரேஞ்ச் ரோவர் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. எனது அமைச்சில் வாகனத்தொகுதியொன்று உள்ளது.
அதில் இரண்டு வீஎயிட் வாகனங்கள், பீ.எம்.டப்ளியூ ஒன்று, ரேஞ்ச் ரோவர் என்று மொத்தமே நான்கு வாகனங்கள் மாத்திரமே உள்ளன.
இந்தநிலையில், நான் பயன்படுத்தும் டபள் கெப் வாகனம் திருத்த வேலைகளுக்குப் போயுள்ளதால், வேறு வழியின்றி ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஏனெனில் ஏனைய வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்துக்குப் பொருத்தமற்றவையாகும்.
முன்னைய அமைச்சர்களின் காலங்களில் இங்குள்ள வாகனங்களை கண்டபடி பயன்படுத்தி பாவனைக்கு உதவாத அளவுக்கு சேதப்படுத்தியுள்ளார்கள்.அதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.