அவுஸ்ரேலியா சிட்னியில் இலங்கைத் தமிழர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அவுஸ்ரேலியா சிட்னியில் இலங்கைத் தமிழர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்ட சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார்.

இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார்.

இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தவேளையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணவிசாரணை அதிகாரியினால் இவரது சடலம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இறுதிக்கிரியைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.