
கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி, ஏ- 9 நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்விபத்து இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றதுடன் மிதிவண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, உடனடியாகவே கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருடைய உடைமைகளில் ஆள் அடையாள அட்டைகள் எதுவும் இல்லாத நிலையில் முதியவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.