பொதுத்தேர்தல் தொடர்பில் 4,363 முறைப்பாடுகள் பதிவு - பாரிய வன்முறைகள் எதுவும் இல்லை

பொதுத்தேர்தல் தொடர்பில் 4,363 முறைப்பாடுகள் பதிவு - பாரிய வன்முறைகள் எதுவும் இல்லை

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 4 ஆயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 897 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 3 ஆயிரத்து 466 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல், நேற்று மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 178 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 30 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 148 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாரிய வன்முறைகள் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.