
ஒடிசாவில் மீண்டும் பயங்கரம் - தொடருந்து மோதி தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி!
ஒடிசாவில் அண்மையில் நிகழ்ந்த தொடருந்து விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக மற்றொரு பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது.
இயந்திரமே இல்லாத சரக்கு தொடருந்து திடீரென புறப்பட்டு மோதியதில் 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் நேற்று மாலை தொடருந்து பாதைகளை சீரமைக்கும் பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பயங்கர வேகத்தில் சூறைக்காற்றும் அதன் தொடர்ச்சியாக கனமழையும் பெய்துள்ளது.
தொழிலாளர்கள், மழையில் நனைவதை தவிர்ப்பதற்காக அருகில் தண்டவாளத்தில் உள்ள சரக்கு தொடருந்துக்கு அடியில் ஒதுங்கியுள்ளனர். இன்ஜின் இல்லாததால் தைரியமாக அந்த தொடருந்துக்கு கீழ் அவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென தொடருந்து நகரத் தொடங்கியுள்ளது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக தொடருந்தின் சக்கரத்தில் அவர்கள் சிக்கி நசுங்கினர்.
இந்த கோர விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்று அதிக வேகத்தில் வீசியதால் தொடருந்து நகர்ந்து இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.