கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி ; வவுனியா காவல்துறையினர் அதிரடி - 10 பேர் கைது!

கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி ; வவுனியா காவல்துறையினர் அதிரடி - 10 பேர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் (30.05) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் வவுனியாவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வவுனியா காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக இரவில் ஒன்று கூடி நின்றோர் என சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.