கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - புனித தன்மையை கெடுக்கும் செயலா?
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும் அபாயம் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால பகுதியில் அப்பகுதியில் இருந்து சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டமையால் ஏற்பட்ட குழிகள் என தெரிவிக்கப்படுகிறது.
உயர்பாதுகாப்பு வலயம்
குறித்த பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990 ஆம் ஆண்டு கால பகுதியில் இடம்பெயர்ந்து சென்றனர். அதனை தொடர்ந்து குறித்த பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தன. அந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் 2014 ஆம் ஆண்டு கால பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு வந்தன.

அக்கால பகுதியில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து, யாழின் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக முகாம்களில் வசித்தவர்களை, காணிகள் அற்றவர்களை "நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்" எனும் பெயரில் வீடுகள் அமைத்துக்கொடுத்து, பாரிய குழிகளை அண்டிய பகுதிகளில் குடியேற்றினார்கள்.
இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு வருடங்களில் அப்பகுதிகள் முற்று முழுதாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்டதை பாரிய குழிகளுக்குள் கழிவுகளை கொட்ட தொடங்கினர்.
முதலில் உக்காதா கழிவுகளை , பிளாஸ்ரிக் கழிவுகளை கொட்டியவர்கள் , பின்னர் இறைச்சி கழிவுகள் , மருத்துவ கழிவுகள் என எவ்வித கண்காணிப்புக்களும் , கட்டுப்பாடுகளும் இன்றி குழிகளுக்குள் கொட்டப்பட்டன.
விலங்குகளால் சுகாதார சீர்கோடுகள்
அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பகுதியில் அப்பகுதியில் இருக்கும் மக்கள் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு கட்ட தொடங்கினர். அதன் போது குறித்த பகுதியில் உள்ள குழிகளை தாம் தென் கொரிய நாட்டின் நிதி உதவியுடன் " சுகாதார நில நிரவுகை திட்டம்" ஊடாக குழிகளை நிரவுவதாக தெரிவித்தனர்.

அதாவது பாரிய குழியின் அடிப்பகுதியில் மிக தடிப்பான பொலிதீன்கள் பரப்பட்டு , அதன் மேல் குப்பைகள் கொட்டப்பட்டு , நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லாமல் குப்பைகள் நிரவப்படும்.
அதன் பின்னர் ஒரு கட்டத்தில் மண் போட்டு , மீண்டும் பொலித்தீன்கள் பரவப்பட்டு , குப்பைகள் கொட்டப்படும். இவ்வாறாக ஒவ்வொரு படிமுறை படிமுறையாக குப்பைகள் கொட்டப்பட்டு குழி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது அவ்வாறு அந்த குழிகள் நிரவ 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும்.
இந்த காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால் ஏற்படப்போகும் சுகாதார சீர்கோடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என பலரும் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
அதனை அடுத்து சில வருடங்கள் அக்குழிகளுக்குள் பாரிய அளவில் கழிவுகள் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் , மீண்டும் அப்பகுதியில் உள்ள குழிகளுக்குள், வலி. வடக்கின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் வலி. தெற்கு பிரதேச சபை மற்றும் கடற்படையினர் கழிவுகளை கொட்ட தொடங்கியுள்ளனர்.
புண்ணிய புனித தன்மையான பூமி
கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ,போன்ற ஐந்து இந்து ஆலயங்களும் , சித்தர்களின் சமாதி கோவில்களும் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் தேவாலயமும் காணப்படுவதால் அப்பகுதி புண்ணிய புனித தன்மையான பூமி எனவும் அப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதனால் , அதன் புனித தன்மைகள் அற்றுப்போகும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

அது மாத்திரமன்றி , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் முதலீட்டு வலயம் உருவாக உள்ள நிலையிலும் , கீரிமலையில் மஹிந்த ராஜபக்சே காலத்தில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதானல் , அதன் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றன.
அவை மாத்திரமின்றி குப்பை கொட்டப்படும் பகுதிக்கு மிக அருகில் கடல் உள்ளது. மழை காலத்தில் கடல் நீர் உட்புகுமாயின் அது பெரும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து, உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்று கழிவுகள் கொட்டப்படுவதனை நேரில் பார்த்துள்ளனர்.
அது தொடர்பில் , கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கின் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்து அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரினர்.
அந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்ற போது டிப்பர் வாகனத்தில் கடற்படையினர் கழிவுகளை கொட்டுவதற்கு எடுத்து வந்த நிலையில் அதனை அங்கு கொட்டாது தடுத்து நிறுத்தினர்.
யாரும் கழிவுகளை கொட்ட முடியாது
அதேபோன்று வலி. தெற்கு பிரதேச சபையினரும் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த வேளை அத்தனையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்திய நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த தவிசாளர் , அங்கு அனுமதியின்றி யாரும் கழிவுகளை கொட்ட முடியாது என கூறி கழிவு ஏற்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய பின்னர், குறித்த குழிகளுக்கு செல்லும் பாதை ஒன்றில் காணப்பட்ட "கேற்றினை" பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.

அதன் போது தவிசாளர் பூட்டி சென்ற "கேற்றுக்கு" அருகினால் , மற்றுமொரு பாதை காணப்படும் நிலையில் , அதனூடாக கழிவுகளை எடுத்து வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியும். அதனால் அப்பகுதிக்குள் எவரும் அனுமதியின்றி நுழைய முடியாதவாறு, நிரந்தர வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் , "நல்லிணக்க புர" மக்கள் மாத்திரமின்றி , முதலீட்டு திட்டங்கள் , பாரிய அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றுடன் , சுற்றுலாத்துறைக்கும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். நீண்ட கால திட்டமிடல்கள் இன்றி , கழிவுகளை கொட்ட அனுமதிப்பது பாரிய சிக்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தோர் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.