மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை...

மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை...

வடமேற்கு மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாடுகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேற்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாடுகளின் தோலுடன் தொடர்புடைய வைரஸ் நோயான Lumpy Skin diseases தற்போது வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 கால்நடை அதிகாரி பிரிவுகளில் 34 க்கும் பரவியுள்ளது.

நிலைமையை கருத்திற் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ்.பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கும் பின்னர் வடமத்திய மாகாணத்தின் ஊடாக வடமேற்கு மாகாணத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மாடுகளுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டதன் பின்னர் பால் உற்பத்தி குறைவடையும் எனவும் இதனூடாகவடமேற்கு மாகாணத்தில் பால் உற்பத்திக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.

இந்நோய் தொற்று காரணமாக மாடுகளின் இறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், இந்நோயை உரிய முறையில் நிர்வகித்து மாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கினால் மூன்று வாரங்களுக்குள் மாடுகளை குணப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படும் என பெரேரா தெரிவித்தார்.