"மாணவர்களின் வசதிக்கே முன்னுரிமை - பரீட்சை திணைக்களத்துக்கு அல்ல" - ரணில் அதிரடி

"மாணவர்களின் வசதிக்கே முன்னுரிமை - பரீட்சை திணைக்களத்துக்கு அல்ல" - ரணில் அதிரடி

பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, பரீட்சை திணைக்களத்தின் வசதிக்கு அல்ல என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால், அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அதிபர், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் வசதிகளை வழங்க முடியுமாயின், அதற்காக அடுத்த சில நாட்களில், நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (29) ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 3,568 நிலையங்களில் 472,553 மாணவர்கள் தோற்றுகின்றனர். அதற்காகப் சுமார் 40,000 அரச அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், இம்முறை பல பாடசாலைகளின் மாணவர்கள் தாம் கல்வி கற்கும் பாடசாலைக்குப் பதிலாக, வேறு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக பெற்றோர்களும் மாணவர்களும் அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.