மிகவும் சூட்சமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது…!

மிகவும் சூட்சமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது…!

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் மற்றும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் நேற்று முன்தினம் (22.05.2023) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து ரொட்டவெவ கிராமத்திற்கு ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதற்கு அமைவாக இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனை இடுவதற்காக பொலிஸார் நிறுத்தியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அவர்கள் பயணித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின் குறித்த இளைஞர்களை சோதனையிட்ட போது இளைஞர் ஒருவரின் மல வாயிலுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் 7 பக்கெட் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரும்,  திருகோணமலை - பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக தெரியவருகிறது. 

கைது செய்யப்பட்ட  இரு இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை கஞ்சாவை விற்பனைக்காக தாம் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட பெண் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.