
வெள்ளை வானில் வந்தவர்கள் சிறுவனை கடத்த முயற்சி
கிளிநொச்சி - பளை கரந்தாய் பகுதியில் தாயுடன் சென்ற சிறுவன் ஒருவரை சிலர் கடத்திச் செல்வதற்கு முயன்றுள்ளனர்.
கரந்தாய் ஏ9 வீதியூடாக தாய் ஒருவர் தனது மகனை அழைத்து வந்த வேளை, குறித்த சம்பவமானது நேற்று(09) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இனந்தெரியாத சிலர் கறுப்பு துணியால் முககவசம் அணிந்து வந்து, சிறுவன் ஒருவரை வெள்ளை நிற வாகனம் ஒன்றில் கடத்த முயன்ற போது காப்பாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் வீதியில் சென்றவர்கள் மடக்கிப்பிடிக்க முற்படுகையில், குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.