அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை, குடும்பங்களின் சமூக - பொருளாதார பாதிப்பு நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.
சமூக-பொருளாதாரக் காரணிகள்
குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், இருப்பிட வசதி, அடிப்படைச் சேவைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் கடன்பாடுகள் ஆகிய சமூக-பொருளாதாரக் காரணிகள் புதிய தெரிவில் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.

தற்போதைய தெரிவு செயற்பாட்டில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புதிய முறைமையின் பயனுள்ள தன்மையை ஆராய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்த நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய சமூக-பொருளாதார கட்டமைப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.