நாசாவின் புதிய சாதனை: 13 லட்சம் மக்களுடன் விண்வெளிக்கு பாயும் நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி
Nancy Grace Roman Space Telescope: நாசாவின் முதல் பெண் தலைமை வானியலாளரும், ஹப்பிள் தொலைநோக்கி உருவாக்கத்திற்கு முக்கியக் காரணமுமான நான்சி கிரேஸ் ரோமன் அவர்களின் நினைவாக இந்தத் தொலைநோக்கி பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA), ஆகஸ்ட் 30, 2026 அன்று நான்சி கிரேஸ் ரோமன் என்ற பிரம்மாண்ட விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் ஏவுகிறது. ஆனால் இந்த விண்கலம் அறிவியல் கருவிகளை மட்டும் சுமந்து செல்லவில்லை; பூமியிலிருக்கும் 1.3 மில்லியன் (13 லட்சம்) மனிதர்களின் பெயர்களையும் தன்னோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறது.
நாசா நடத்திய "Send Your Name with Roman" என்ற சிறப்புப் பிரச்சாரத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பெயர்களை இலவசமாகப் பதிவு செய்ய அழைக்கப்பட்டனர். உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் ஆர்வத்துடன் பதிவு செய்த மக்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய எஸ்டி கார்டில் (SD Card) பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டன. நாசாவின் விண்வெளி மையப் பொறியாளர் ஒருவர், அந்த மெமரி கார்டை தொலைநோக்கியின் உட்பகுதியில் பத்திரமாகப் பொருத்தியுள்ளார். பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் பிரத்யேக டிஜிட்டல் போர்டிங் பாஸ் வழங்கி நாசா கௌரவித்தது.
ஜூலை 12 உடன் நிறைவடைந்த இந்தத் திட்டத்தின் மூலம், மனிதர்களின் பெயர்களையும் செய்திகளையும் விண்வெளிக்கு அனுப்பும் நாசாவின் நீண்டகால பாரம்பரியம் மீண்டும் ஒருமுறை நிறைவேறியுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தொலைநோக்கிக்கு, நாசாவின் முதல் பெண் தலைமை வானியலாளரும், புகழ்பெற்ற ஹப்பிள் தொலைநோக்கியின் உருவாக்கத்திற்கு முக்கியக் காரணமுமான நான்சி கிரேஸ் ரோமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் இரண்டு மிகப்பெரிய புதிர்களுக்கு விடைதேடப் போகிறது. ஒன்று, பிரபஞ்சத்தை வேகமாக விரிவடையச் செய்யும் இருண்ட ஆற்றல் (Dark Energy) என்ன செய்கிறது? இரண்டாவது, நமது சூரிய குடும்பத்தைத் தாண்டி பிற கிரகங்கள் எவ்வளவு உள்ளன? ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு பரந்த பார்வைத் திறன் கொண்ட இந்த ரோமன் தொலைநோக்கி, கோடிக்கணக்கான விண்மீன் திரள்களையும் ஆயிரக்கணக்கான புதிய கிரகங்களையும் அதிவேகமாகப் படம் பிடித்துக் காட்டவிருக்கிறது.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி பிற்பகல் 4:50 மணிக்கு இந்த தொலைநோக்கி விண்ணில் பாயவுள்ளது. அங்கிருந்து புறப்பட்டு, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள L2 (இரண்டாம் லாக்ராஞ்சியன் புள்ளி) என்ற அமைதியான விண்வெளிப் பகுதியை அடையும்.
அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு, பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்று பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் மாற்றங்களையும் இது ஆராயப்போகிறது. பூமியில் வாழும் 13 லட்சம் மனிதர்களின் பெயர்கள், இந்த பிரம்மாண்ட தேடலில் அமைதியான பயணிகளாக விண்வெளியின் ஆழத்திற்குச் செல்லவுள்ளன.