நீதியமைச்சின் நடமாடும் சேவை குறித்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை அவதானம்!
நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான விடங்கள் அமைச்சரவையால் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, தென்மாகாணத்தில் மாத்தறை மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடமாடும் சேவைகள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் 04 இனை இந்த ஆண்டில் முன்னெடுக்க நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
காணி, உத்தியோகபூர்வ ஆவணங்கள், சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கல், நீதி அமைச்சு மற்றும் அதன்கீழ் இயங்குகின்ற நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டுவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவைகள் வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த விடயங்கள் அமைச்சரவையால் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன.