போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பண வெகுமதி!
இலங்கைக்கு தெற்காக சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 343 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், 11 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 309 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 343 கிலோ 456 கிராம் எடையுள்ள ஹெரோயின் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 3,400 மில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருட்கள், இழுவை படகுகள் என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, போதைப்பொருள் தொடர்பில் சரியான இரகசிய தகவல்களை வழங்குவோருக்கு எதிர்காலத்தில் பாரிய வெகுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட 350 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான போதைப்பொருட்களை பார்வையிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.