இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு அச்சுறுத்தல்
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்த காரணத்தினால், இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் 9 மாத மகளுக்கு ட்விட்டர் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் டெல்லி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி காவல்துறையின் மகளிர் பிரிவு இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைமை அதிகாரி சுவாதி மலிவார் தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணியின் ஒரேயொரு முஸ்லிம் வீரரான மொஹமட் ஷமிக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தன்னம்பிக்கை இல்லாதவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர் என ஷமிக்காக விராட் கோலி முன்வந்து கருத்து தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.