நாட்டை முடக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு இடையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளன.
இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காணப்படும் நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், நாட்டை முடக்குமாறும் காதாரத் துறை தொடர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், இந்த கலந்துரையாடலின்போது பயணக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை அமைத்துக் கொடுத்து, அனைத்து விதமான ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிப்பது பற்றி இந்த கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையின்படி, நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்