4 நாட்களாக மின்சாரம் தடை - எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

4 நாட்களாக மின்சாரம் தடை - எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

புத்தளம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதனை கண்டித்து புத்தளத்தில் நேற்று (05) திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் தில்லையடி, ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி, பாலாவி, நாகவில்லு , மதுரங்குளி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 2 ஆம் நிகதி முதல் மின்சாரம் அடிக்கடி தடைப்பபட்டு வருகின்றது.

இதனை கண்டித்தே புத்தளம் நகரிலுள்ள பிரதேச மின் பொறியியளாளர் அலுவலகத்திற்கு முன்னால் கொரோனா சட்ட விதிகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் , புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான ரிபாஸ் நஸீர் , பிஸ்லியா பூட்டோ, பத்திமா இல்மா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் கல்வி பயிலும் மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், விவசாயிகள் என அனைவரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் சில பகுதிகளில் மின்விசிரி, கணினி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களும் பழுதடைந்துள்ளதாகவும் விசனம் தெரிவித்தனர்.

இதுகுறித்த அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதுடன், பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், பிரதேச பொறியியளாளரை சந்தித்து இது தொடர்பில் மகஜர் ஒன்றை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது இருவருக்கு மாத்திரம் பிரதேச பொறியியளாளரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் , புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் ஆகியோர் பொறியியளாளரை சந்திதனர்.

இதன்போது, காலை, மாலை, இரவு என தொடர்ச்சியாக மின்சாரம் அடிக்கடி தடைப்படுவது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்துடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

குறித்த மின்சார தடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவசரமாக நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக ஒருவாரம் கால அவகாசம் வழங்குமாறும் புத்தளம் பிரதேச மின்சார பொறியியளாளர் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.