ஆசிரியைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி - கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ஆசிரியைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி - கண்டு கொள்ளாத அதிகாரிகள்

நாட்டில் கொரோனா தொற்று பரவி வருகின்ற பின்னணியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெரும்பாலும் இணைய வழியின் ஊடாகவே நடத்தப்பட்டு வருகின்றது.

வட்ஸ்அப், சூம், மைக்ரோ டீம்ஸ் உள்ளிட்ட செயலணிகளை பயன்படுத்தியே, கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கான உபகரணங்கள் இல்லாமை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

அதனால் தமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் உதவியுடன், மாணவர்கள் தமது கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை நடத்தும் ஆசிரியைகள் தற்போது புதுவிதமான பிரச்சினையொன்றை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாணவர்கள், வேறு நபர்களின் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக ஆசிரியைகளின் தொலைபேசிகளுக்கு அழைப்புக்களை மேற்கொண்டு, கல்வியை தொடர ஆரம்பித்துள்ளமையினால், ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கங்கள் வெளிநபர்களுக்கு இலகுவாக கிடைக்கப் பெறுகின்றது.

இவ்வாறு ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு, வெளிநபர்கள் தொடர்ச்சியாக அழைப்புக்களை மேற்கொண்டு இடையூறுகளை விளைவித்து வருவதாக கல்வி அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆசிரியைகள் கூறியுள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.