பெண் மருத்துவர் கொலை: 7 நாட்களுக்குள் 3 முறை யாழ்ப்பாணம் சென்ற சந்தேகநபர்

பெண் மருத்துவர் கொலை: 7 நாட்களுக்குள் 3 முறை யாழ்ப்பாணம் சென்ற சந்தேகநபர்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர், கைது செய்யப்படுவதற்கு 7 நாட்களுக்குள் மூன்று முறை யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார், மூன்றாவது முறையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் வழிகாட்டலில் நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் ஆலோசனையின் கீழ் நடைபெறும் விசாரணையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் கைது

கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை தெல்தெனிய காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

 

பெண் மருத்துவர் கொலை: 7 நாட்களுக்குள் 3 முறை யாழ்ப்பாணம் சென்ற சந்தேகநபர் | Details Revealed Woman Found Dead Inside Car

உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணராக பணிபுரிந்த ஷிமயா தர்ஷனி என்ற 34 வயதுடைய பெண் என்பது பின்னர் கண்டறியப்பட்டது. 

அவரது காதலன் எனக் கூறப்படும் நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் பிள்ளையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

 

பின்னர் இவர்களிடம் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

 

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை

விசாரணையின் போது பிரதான சந்தேகநபர், தான் அறைக்குச் சென்றபோது அந்தப் பெண் ஜன்னல் திரைச்சீலை தொங்கவிடும் கம்பியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

 

பெண் மருத்துவர் கொலை: 7 நாட்களுக்குள் 3 முறை யாழ்ப்பாணம் சென்ற சந்தேகநபர் | Details Revealed Woman Found Dead Inside Car

எனினும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜன்னல் திரைச்சீலை கம்பி மனித உடலின் எடையைத் தாங்கும் அளவுக்கு வலுவானது அல்ல என்பதால், விசாரணையைத் திசைதிருப்ப சந்தேகநபர் பொய் கூறுவதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.