நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
இலங்கையில் நேற்று மேலும் இரண்டு கொவிட் 19 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 149 ஆக உயர்வடைந்துள்ளன.
கொழும்பு - 15 பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர், பிம்புர ஆதார வைத்தியசாலைக்கும் அதன் பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் நிலையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்புல்கொடை பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவர் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்தார்.
உயர் நீரிழிவு நோய் நிலைமை மற்றும் கொவிட்19 தொற்றுடன் நியூமோனியா காய்ச்சல் அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.