மட்டக்களப்பில் விதிக்கப்பட்ட தடை இன்றுமுதல் நீக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மத தலங்களுக்கு 5 பேருக்கு மேல் வழிபட செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று சனிக்கிழமையில் (12) இருந்து 25 பேர் ஒரு தடவைக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சென்று வழிபட தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கொரோனா தடுப்பு செயலணி இன்று சனிக்கிழமை (12) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8ம் திகதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட பி.சிஆர் பரிசோதனை முடிவுகளின்படி எந்தவிதமான புதிய தொற்றாளர்களும் இனங்காணப்படாததால் மற்றும் நீண்ட காலமாக மத தலங்களுக்கு 5 பேர் என்ற எண்ணிக்கையில் சென்று வழிபடமுடியும் என விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மத தலைவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த எண்ணிக்கையை 25 பேராக அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு தடவைகளில் 25 பேர் மத தலங்களில் வழிபாடு செய்யமுடியும். இருந்தபோதும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் என்பது கண்டிப்பானது என்பதுடன் இதனை கவனிப்பது மத தலங்களின் பெறுப்பாகும். இதனை மீறுவோருக்கு எதிராக சுகாதார அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேவேளை அக்கரைப்பற்று, கல்முனை பகுதிகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த பகுதிகளில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து கடமைகளை மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.