கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் பல இடங்களுக்கு சென்றதால் அச்சத்தில் மக்கள்!
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொடை யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன. இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவின்படியே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இவர் வட்டகொடை நகரத்தில் சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ளார். இச்சம்பவத்தையடுத்து வட்டகொடை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
தொற்று உறுதியான நிலையில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார். எனவே, எவரும் நகரப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.