புகையிரதக் கடவையின்றி அச்சத்தில் வாழும் மக்கள் - விடுத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் புகையிரத வீதியின் 302 ஆவது கிலோமீற்றர் பகுதியில் புகையிரத கடவை ஒன்றினை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை இல்லாததன் காரணமாக அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
புகையிரதக் கடவை அமைத்து தருமாறு பல தடவைகள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுவிடயமாக பனிக்கன்குளம் கிராம அறிவுநதி சனசமூக நிலையத்தினால் குறித்த விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய காதர் மஸ்தானிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அண்மையில் இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களிடத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சபையின் கவனத்துக்கு விடயத்தை கொண்டுவந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய காதர் மஸ்தான் அவர்கள் இதுதொடர்பில் கேட்டறித்து தீர்மானமாக நிறைவேற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறாமையால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் மிக விரைவில் தீர்வை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.