இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை மற்றும் மகள்: தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை மற்றும் மகள்: தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இருவரும் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இவ்வாறு தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மார்க்கமாக நேற்று முன்தினம் அதிகாலை புலேந்திரன் (வயது-33) மற்றும் அவரது மகளான சுபத்ரா (வயது-8) ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் புலேந்திரனின் தந்தையார் மடு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அழைத்துச் சென்ற நபர் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், படகு மூலம் வந்த தந்தை மற்றும் மகள் இருவரையும் மடு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மடு பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அம்புலன்ஸ் வண்டி மூலம் இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 14 நாட்கள் குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லை எனின், மீண்டும் மன்னாரிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மன்னாரில் உள்ள அவர்களின் வீட்டில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படஉள்ளனர் என வைத்திய அதிகாரி ஒருவர் மேலும் தொரிவித்தார்.