எஸ்.பி.பி. மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பி. மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

 

பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்.

 

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

முதலமைச்சர் எடப்பாடி தனது இரங்கல் செய்தியில் ‘‘இனிமையான இணையற்ற குரல் வல்லமை கொண்ட .S.P.பாலசுப்பிரமணியம் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. மிக அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கே சென்ற #SPbalasubramanyam அவர்களின் மறைவு திரைத்துறைக்கும், கலை உலகிற்கும் எனக்கும் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு!

 

ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு!

 

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை இழந்து மிகுந்த துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். #RIPSPB ’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

ஆளுநர் தனது இரங்கல் செய்தியில் ‘‘ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், உலகளவில் இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. மென்மையான குரலாலும், இசையாலும் என்றும் எங்களுடன் வாழ்வீர்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.