கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீற்றர் மைல்கல்கலுக்கு அருகில் கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்ற சிமெந்து ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்னால் வந்த லொறியின் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
அத்துடன் வெலிகந்த, மருதங்கடவல பகுதியில் கவனக்குறைவாகச் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் வெலிகந்த மற்றும் ரத்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 55 வயதுடையவர்களாவர்.
இதேவேளை மொரவெவ, நாமல்பொத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் காயமடைந்த சாரதியும் பெண்ணும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார்.
இவர் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் சீதுவை, கொட்டுகொட பகுதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார்.
மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.