வவுனியா பிரதேச செயலக வளாகத்திற்குள் பெண் ஒருவரின் விபரீத செயற்பாட்டால் ஏற்பட்ட பதற்றம்!

வவுனியா பிரதேச செயலக வளாகத்திற்குள் பெண் ஒருவரின் விபரீத செயற்பாட்டால் ஏற்பட்ட பதற்றம்!

வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தே இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவிற்குளம் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருகள் இருவருக்கும் காணிப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறித்த காணிப் பிரச்சினைக்கு பல வருடங்களாக தீர்வு கிடைக்காதமையினால் ஒரு பெண் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அவரது பயணப்பொதியினுள் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடனும் வந்துள்ளார்.

அதனையடுத்து காணிப்பிரச்சினை தொடர்பான கடிதங்களை தாங்கிய பதாதையினையும் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரின் இவ்வாறான செயற்பாடு காரணமாக அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலமை காணப்பட்டதுடன் வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

அத்துடன் பெண்ணின் பயணப்பொதியினுள் இருந்த மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியையும் மீட்டுள்ளனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணுடன் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் மற்றும் பொலிஸாரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவரின் தாயாரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு காணிப்பிரச்சினைக்கு தீர்வினை தருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்தமையையடுத்து பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பதற்றநிலமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.