வௌிநாட்டில் பணிபுரிவோருக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு

வௌிநாட்டில் பணிபுரிவோருக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு

கொரியாவில் பணிபுரிந்து, பின்னர் மீண்டும் நாடு திரும்பி இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு எதிர்பார்ப்பு இருக்குமாயின், அதற்கான முழுமையான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என பதில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

நேற்று (26) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில், தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற குழுவொன்றை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். 

தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பெரும் பங்களிப்பை வழங்கி வருவதுடன், கொரிய அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்த வேலைவாய்ப்புத் துறைகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், கொரிய உற்பத்தித் துறையில் 1,067 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 

அவர்களுள் 68 பேருக்கு நேற்று இறுதித் தெளிவூட்டல் மற்றும் விமான பயணச்சீட்டுகள் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.