நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

ஸ்ரீபாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர், கடந்த 19ஆம் திகதி இரவு சுமார் 11.00 மணியளவில் ஸ்ரீபாத யாத்திரைக்காக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

எனினும், நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இரவு நேரத்தில் ஸ்ரீபாத யாத்திரை செல்வது பாதுகாப்பானதல்ல என பொலிஸார் அறிவுறுத்தியதுடன், மறுநாள் 20ஆம் திகதி காலை வருமாறும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட குழுவினர் தங்குமிடமொன்றைத் தேடி காரில் திரும்பிச் சென்றபோது, இரவு சுமார் 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே வீதியில் இருந்து கார் விலகி கவிழ்ந்துள்ளது.

காரில் 3 ஆண்களும், 2 பெண்களும் பயணித்த நிலையில், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதே பகுதியில் கடந்த 22ஆம் திகதி காலை 8.15 மணியளவில் நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துகள் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.