தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்துள்ளதாக தேசிய தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று (18) இரவு உயிரிழந்த இந்த பெண் ஒட்டகச்சிவிங்கியின் வயது சுமார் முப்பதாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழப்பதற்கு முன்னர் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எவ்வித நோய்களுக்குமான அறிகுறிகளும் தென்படவில்லை எனவும், முதுமை காரணமாக ஏற்பட்ட இயற்கையான சூழ்நிலையே இந்த இறப்புக்குக் காரணம் என அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

காடுகளில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே ஆகும் என்றும், மிருகக்காட்சி சாலைகளில் உள்ள சூழலில் அவைகளால் அதைவிடக் கூடுதல் காலம் வாழ முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கிடையில், மேலதிக பிரேதப் பரிசோதனைகள் இன்று (19) மேற்கொள்ளப்படவுள்ளன. 

விலங்கியல் பூங்கா சூழலில் விலங்குகளுக்கு வேடுவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்தல், அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப சத்தான மற்றும் சீரான உணவை வழங்குதல், சுத்தமான மற்றும் பொருத்தமான வாழிடங்களைப் பராமரித்தல், அத்துடன் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தேவையான கால்நடை மருத்துவச் சிகிச்சைகளை வழங்குதல் ஆகியவற்றின் காரணமாகவே இந்த ஒட்டகச்சிவிங்கியால் முப்பது ஆண்டுகள் வரை நீண்ட ஆயுளைப் பெற முடிந்துள்ளது. 

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தினால் விலங்கு நலன், மரபணு பன்முகத்தன்மையைப் பேணுதல் மற்றும் விலங்கு பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுடன் செயல்படுத்தப்படும் விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு முடிவதற்குள் புதிய இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.