செம்மணிப் பேரவலம்; சிறுவர்களின் எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்பு
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி நேற்று முன்னெடுக்கப்பட்டது. அகழ்வுகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்தே, அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 298 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தற்பொழுது நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் வல்லுநர்களின் நேரடி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவை தூய்மைப்படுத்தப்பட்டுக் குறியீட்டு இலக்கங்கள் (Code Numbers) இடப்பட்டன.
இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது சிறுவர்களுடைய இரு எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டன.
கடந்த சில நாட்களாக செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறுவர்களின் என்பு கூட்டு தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.