
முல்லைத்தீவு நாயாற்று கடலில் தத்தளித்த பெண்கள்; இருவர் மீட்பு; யுவதி உயிரிழப்பு
முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் பயிற்சி பெறும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
நாயாற்றுக்கடலில் நீராடிக்கொண்டிருந்த போது அவர்களில் மூவர் திடீரென நீரில் அள்ளுண்டு சென்றுள்ளனர். நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பெண் காணாமல்போயுள்ளார்.
காணாமல்போன பெண்ணை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 47, 21 வயதுடைய பெண்களே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதன்போது 20 வயதுடைய பெண்ணே காணாமல்போயுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,
முல்லைத்தீவு, நாயாற்று கடற்பகுதியில் அள்ளுண்டு சென்ற இன்று (31) பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.