
அடுத்த வருடம் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சிக்கல்
அடுத்த வருடம் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சின் அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதமளவில் அதற்கடுத்த வருடத்துக்கான அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளல் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர் மாணவர்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படுவது வழக்கமாகும்.
ஆனாலும் இம்முறை அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜுன் மாதம் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதன் காரணமாக அடுத்த வருடம் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் மாத்திரமன்றி, கல்வியியல் கல்லூரிகளில் புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ளல் மற்றும் அவர்களுக்கான வகுப்புகளை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகளை உரிய காலத்தில் மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சு தற்போதைக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கீழ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.