
எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், திருத்தம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று CPC நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் நிலைத்த நிலையில் தொடர்வதால், ஜூலை மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறைவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த சில வாரங்களாக நிலைத்துள்ளதோடு, சில சமயங்களில் விலை குறையும் சாத்தியம் கூட காணப்படுகின்றன. இந்த நிலைமை தொடருமானால், ஜூலை மாதத்தில் எரிபொருள் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படமாட்டாது" என்றார்.
இதன்படி, விலை நிர்ணய குழு, கடந்த மாதத்திற்கான சராசரி எரிபொருள் விலை மற்றும் சமீபத்திய இறக்குமதி செலவுகளை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாத விலையை தீர்மானிக்கவுள்ளது.