
கிளிநொச்சியில் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னையில் ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பல தடவைகள் மருந்துகள் தெளிக்கப்பட்டிருந்த போதிலும் பிரயோசனமற்ற நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கிளிநொச்சி பொதுச் சந்தை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 20,000 தேங்காய் நாள் ஒன்றுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது 5000 தேங்காயும் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, ஒரு கிலோ தேங்காயின் விலை தொடக்கம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.